Designed by Enthan Thamizh

குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?


ஒரு சில குடும்பங்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு வேறு இடத்திற்கு சென்று வாழ்க்கை நடத்துவர். இதன் காரணமாக 2 அல்லது 3 தலைமுறைகள் குலதெய்வக் கோயில் வழிபாடு பற்றி அறியாமலேயே வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நிலைக்கு வரும் போது குலதெய்வம் எது என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விடும்.

சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாகவோ, அல்லது குலதெய்வத்தின் உதவி கூட ஒரு சிலருக்கு கிடைக்கவிடாத கர்ம வினை காரணமாக , எது குல தெய்வம் என்றே தெரியாத சூழல் ஒரு சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது. இதில் வருந்தத் தக்க விஷயம் யாதெனில், குலதெய்வம் எது என்று தெரிந்தும், அதை முறைப்படி வழிபடாதவர்கள், அதன் மகிமைகள் தெரியாதவர்கள் தான் நம்மில் அநேகம் பேர். வருடத்திற்கு ஒரு முறை கூட செல்ல முடியாத சூழ்நிலை. என்ன பண்றது , அவ்ளோ பிஸி . உங்கள் பெற்ற , தாய் - தந்தையர் , சகல வலிமையும் பெற்று இருந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருப்பவர் தான் உங்கள் குல தெய்வம். நான் ஏற்கனவே பல கட்டுரைகளில் சொன்ன விஷயம் தான். உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், உங்கள் சகல முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், உடனடியாக நீங்கள் நாட வேண்டியது உங்கள் குல தெய்வத்தையே.

சரி, குல தெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்?

உங்களுக்கு ஜாதகம் இருந்தால், லக்கினத்தில் - ஐந்தாம் வீடு, ஐந்தில் உள்ள கிரகம், ஐந்தாம் வீட்டை பார்வையிடும் கிரகம் ஆகியவற்றைப் பாருங்கள். அவற்றின் அடிப்படையிலேயே உங்கள் குல தெய்வம் இருந்திருக்கும். உதாரணத்திற்கு ஐந்தாம் வீட்டிற்கு குருவும், சூரியனும் சம்பந்தப்பட்டு இருந்தால் - சிவ அம்சம் பொருந்திய குரு ஸ்தானத்தில் உள்ளவர் உங்கள் குல தெய்வமாக இருக்கலாம்.

ஐந்தில் - ஒரு நீச கிரகமோ, அல்லது ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீசமாகவோ இருந்தால் - உங்கள் குல தெய்வத்தை நீங்கள் கண்டு கொள்ளவேயில்லை என்று அர்த்தம். உங்கள் தாத்தா , அப்பா காலத்திலேயே அதை ஒரு பொருட்டாக மதித்து வணங்கவில்லை என்று அர்த்தம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையா சொல்லனும்னா, பெத்த புள்ளைகளை அப்பனும் மதிக்கலை. புள்ளையும் அப்பனை பெரிசா கண்டுக்கலை. எதுவும் நல்ல உதவி ஒருத்தருக்கொருத்தர் பண்ணிக்க முடியலைன்னு வைச்சுக்கோங்களேன்.

நீங்கள் உரிய , முறைப்படி வணங்கி அந்த குல தெய்வத்தின் ஆசி பெற வில்லை என்றால் - உங்களுக்கு வாழ் நாள் முழுக்க , தடைகள் , முட்டுக் கட்டைகள் என்று தொடர் போராட்டம் தான். உங்கள் பரம்பரையின் , ஒட்டு மொத்த பாவ கணக்கில் ஒரு பெரும் பகுதியை நீங்கள் தீர்த்து , அதன் பிறகு - உங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும்.

குல தெய்வம் - உங்கள் வம்சா வழியில் பிறந்து வளர்ந்து, உங்கள் வம்சம் தழைக்க - தன் உடல் , பொருள் , ஆவியை அர்ப்பணித்தவராக கூட இருக்கலாம். உங்க தாத்தாவுக்கு, தாத்தாவுக்கு தாத்தா னு ஒரு பேச்சுக்கு வைச்சுக்கோங்களேன்.. இதில் ஒரு சூட்சுமம் பாருங்க.

ஐந்தாம் வீடு வைச்சுத்தான் , உங்கள் குழந்தைகளை பற்றி நீங்க தெரிஞ்சுக்க முடியும். அதுவே குல தெய்வம் ஸ்தானம் . உங்க பூர்வ புண்ணிய ஸ்தானம். எப்படி? உங்க அப்பாவை பற்றி தெரிஞ்சுக்க - ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? அந்த அப்பாவுக்கு அப்பா.. ஒன்பதாம் வீட்டுக்கு , ஒன்பதாம் வீடு பார்ப்பீங்களா? எங்கே வருது தெரியுதா..? இதே ஐந்தாம் வீடுதான். இந்த ஐந்தாம் வீட்டுக்கு , ஐந்தாம் வீடு - ஒன்பதாம் வீடு. அதாவது , உங்க பையனுக்கு பூர்வ புண்ணியம், உங்க அப்பா.

அதுக்கு தான் சொல்றேன்.. தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்.. நீங்க செய்யும் நல்லது, கெட்டது அனைத்தும் - உங்க சந்ததியை ஆட்டிப் படைக்கவிருக்கும் விஷயங்கள். இதுவரை , பாவங்கள் நீங்கள் அறிந்தும் ,அறியாமலும் செய்து இருந்தாலும், வர விருக்கும் காலத்தில் - அவை தொடராது , உங்கள் குழந்தைகளுக்கும் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுங்கள். ஒரு சுபிட்சமான தேசம் வளரும். மனிதம் மலரும்.

சரி, குலதெய்வம் தெரியாதவர்கள் எந்த தெய்வத்தை வணங்கலாம்?

இயல்பிலேயே உங்களுக்கு எந்த தெய்வத்தின்மேல் ஈடுபாடு என்று பாருங்கள். 
பரம்பரையாக , ஜென்ம ஜென்மமாக உங்கள் உணர்வில் ஊன்றி இருக்கும் விஷயம் அது. அது சிவனோ, பெருமாளோ, அம்மனோ, முருகனோ, கருப்ப சாமியோ, முனியோ எதுவாக வேண்டுமானாலும் பரவா இல்லை.

இல்லையா , அண்ணாமலையாரை குல தெய்வமாக கும்பிட ஆரம்பிக்கலாம். 
சதுரகிரி அருகில் இருப்பவர்கள் - மகாலிங்கத்தை குல தெய்வமாக வழிபடலாம்.

இல்லையா , திருச்செந்தூர் முருகனை வணங்கலாம். பொதுவாக 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று கூறுவர். ஆனால் திருச்செந்தூரில் நீர்நிலைக்கு (கடல்) அருகில் உள்ள திருத்தலத்தில் முருகப் பெருமான் வீற்றுள்ளதும், இந்த கோயிலுக்கு தனிச் சிறப்பை அளிக்கிறது.
மேலும், திருச்செந்தூர் சம்ஹார ஸ்தலமாகவும் விளங்குகிறது. எனவே, தீய சக்தியை மட்டுமின்றி, மனிதர்கள் மனதில் இருக்கும் அளவுக்கு மீறிய ஆசை, கோபம், காமம் ஆகியவற்றையும் அழிக்கக்கூடிய சக்தி இந்த திருத்தலத்திற்கு உள்ளது. இதுபோன்ற சூழலில் இருப்பவர்கள் திருச்செந்தூருக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதுடன், திருச்செந்தூர் முருகனை குலதெய்வமாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.

திருச்செந்தூர் - குருவுக்கும், செவ்வாய்க்கும் உரிய ஸ்தலமாகவும் விளங்கும் இடம்.

இது ஒரு கால ரகசிய நுட்பம். நம் வாசகர்கள் அனைவரும், இந்த விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் , உங்கள் வாழ்வில் ஏற்படும் அத்தனை தடங்கல்களையும் தாண்டி , ஒரு நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை நம்மில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்!

வாழ்க வளமுடன் !

0 கருத்துகள்:

கருத்துரையிடுக